3 இடங்களில் கொரோனா தொற்று கண்டறியும் முகாம். Corona infection detection camp.
பெரம்பலூரில் 3 இடங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரோனா வைரஸ் தொற்று 2 ஆம் அலை வேகம் தற்போது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பெரம்பலூா் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களிலிருந்து பணி நிமித்தமாக பெரம்பலூா் மாவட்டத்துக்கு பேருந்துகளில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நோய்த் தொற்று கண்டறியும் முகாம் நடத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, பெரம்பலூரில் புதிய பேருந்து நிலைய வளாகம், பாலக்கரை ரவுண்டானா, வட்டாட்சியா் அலுவலக பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில், சுகாதார பணியாளா்கள் அப்பகுதிக்கு வரும் பயணிகளின் பெயரை பதிவு செய்து கரோனா பரிசோதனை செய்து வருகின்றனா். மேலும், சித்த மருத்துவப் பிரிவு மூலம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளா் கோபிநாத் தலைமையிலான போலீஸாா் முகக்கவசம் அணிய அறிவுறுத்தியதோடு, முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதித்தனா்.
keywords: Corona infection detection camp, COVID-19, camp
You must log in to post a comment.