மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூடி வைக்க அறிவுறுத்தல்.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சூழலில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூடி வைக்க கூறும் கல்வித்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் சங்கிலித் தொடரை உடைக்கும் வகையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் மாணவர்களும், இளைஞர்களும் வீடுகளிலேயே முடங்கியிருக்க முடியாமல் அருகிலுள்ள பள்ளி மைதானங்களில் விளையாடச் செல்கின்றனர்.
கிராமப்புறங்கள் மற்றும் சில நகர்ப்புறங்களில் உள்ள அரசு பள்ளி வளாகங்களில் மாணவர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் கூடி காலை நடைபயிற்சியும், மாலையில் பல்வேறு விளையாட்டுகளிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பலர் ஒரே இடத்தில் கூடும் நிலையை ஏற்படுத்தி விடுவதாகவும், இத்தகைய சூழல் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடுமோ என்ற தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளது. ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே பள்ளிகளில் மாணவர்களோ, இளைஞர்களோ கூடி விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முழு ஊரடங்கு அமலில் இருப்பதனால் அத்தியாவசிய அலுவலகங்கள் தவிர மற்ற அரசு துறை அலுவலகங்கள் செயல்பட அனுமதியில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி வளாகங்களுக்குள் யாரும் வராத வகையில் பூட்டி வைக்க வேண்டும்.
You must log in to post a comment.