குன்னம் அருகே மணல் அள்ளிய 4 பேர் கைது; வண்டிகள் பறிமுதல்
மணல் அள்ளிய 4 பேர் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் சிற்றாறில் நேற்று அதிகாலை திருட்டுத்தனமாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கராசுக்கு தகவல் கிடைத்தது. அவர் இது குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்தர், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 27), செல்வராஜ் (55), வரதராஜ் (57), சின்னதுரை (52) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய 4 மாட்டு வண்டிகள் மற்றும் 2 யூனிட் மணல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினத்தந்தி
You must log in to post a comment.