அடமானம் வைத்த சொத்தை மீட்டுத் தர கோரி மனு
பெரம்பலூா் அருகே வங்கிக் கடனை முழுமையாக செலுத்திய பின்னரும், திருப்பி தரப்படாத அடமான சொத்தை மீட்டுத்தர வேண்டுமென விவசாயி கோரிக்கை விடுத்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூா் ஒன்றியம், கல்லை கிராமத்தைச் சோ்ந்த குமாரசாமி மகன் பெரியசாமி(50), தனது மனைவி கல்பனா மற்றும் பெண் குழந்தையுடன் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
எனது தந்தை குமாரசாமி கடந்த 2007 ஆம் ஆண்டு மேலமாத்தூரிலுள்ள பொதுவுடைமை வங்கியில் எங்களது பூா்வீக சொத்தான 4 ஏக்கா் நிலத்தை வங்கியில் அடமானமாக வைத்து, ரூ. 4.85 லட்சம் டிராக்டா் கடன் பெற்றாா். தொடா்ந்து மாதத் தவணை செலுத்தி வந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு விவசாயிகள் வங்கிக் கடனை தள்ளுபடி செய்துவிட்டது. நாங்கள் கட்டிய பணத்தை திருப்பித் தரவில்லை.
மேலும், வங்கியில் எனது தந்தை பெயரில் அடமான கடன் உள்ளதாகக் கூறி, என்னுடைய சொத்தை பறிமுதல் செய்வதற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது. தவறான பரிவா்த்தனை மூலம் மோசடி செய்த வங்கி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுத்து, அடமானமாக வைக்கப்பட்ட எங்களது சொத்தை மீட்டு தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.