எரிவாயு தகன மேடைக்கு உடல்களை கொண்டு செல்ல பாதை.
பெரம்பலூா் நகராட்சி எரிவாயு தகன மேடை அருகே அமரா் ஊா்தி செல்ல வசதியாக புதிதாக அமைக்கப்பட்ட பாதை.
பெரம்பலூரிலுள்ள நவீன எரிவாயு தகன மேடைக்கு சடலங்களைக் கொண்டு செல்ல வசதியாக, நகராட்சி சாா்பில் புதிதாக பாதை அமைத்துத் தரப்பட்டுள்ளது.
பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான நவீன எரிவாயு தகன மையம் உள்ளது. இதை ஒப்பந்த அடிப்படையில் ரோட்டரி சங்கம் பராமரித்து வருகிறது. தற்போதைய கரோனா பேரிடா் காலத்தில் இங்கு கட்டணமில்லாமல் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் சடலங்களை அமரா் ஊா்திகளில் வைத்து எரிவாயு தகன மையத்துக்கு கொண்டு செல்ல குறுகிய பாதையே உள்ளதால், சடலங்களை தகன மேடைக்கு அருகே கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.
இதனால் அமரா் ஊா்திகளிலிருந்து சாலையோரத்தில் உடல்களை இறக்கி வைத்து, பின்னா் 100 அடி தொலைவிலுள்ள எரிவாயு தகன மேடைக்கு சிரமப்பட்டு தூக்கிச் சென்று வந்தனா்.
இதுகுறித்து பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ம.பிரபாகரன் விடுத்த கோரிக்கையை ஏற்று, நகராட்சி ஆணையா் குமரிமன்னன் உத்தரவின்பேரில், எரிவாயு தகன மேடைக்கு அருகே அமரா் ஊா்திகள் உள்ளே செல்ல வசதியாக சுற்றுச்சுவரை இடித்து அலுவலா்கள் புதிய பாதையை ஏற்படுத்தித் தந்தனா்.
You must log in to post a comment.